சிரித்தேன்! அவள் அனுப்பிய மின்னஞ்சலை படித்ததன் முதல் வெளீப்பாடு. அந்த இதழ்விரிப்பு எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏன் சிரித்தேன்? எந்தவொரு உணர்வின் உச்சமும் எதிர்பதமாகவே வெளீப்படுகிறது. என் அடர்ந்த தனிமையை குறீப்பால் உணர்ந்து இருதுளீக் கண்ணீர் மட்டும் ஆறுதல் கூற முன் வந்தன.முடியாது என்பதறிந்து, கண்ணத்தில் உருண்டு மறைந்தன. என் வாழ்வின் கடைசி நொடி வரை ஒட்டி இருக்கப்போககிற ஒரு தருணம் எப்படி இத்தனை சாதாரணமாக கடந்து சென்றது? என்று ஆச்சிரியமாக இருந்தது. திண்ணமான வெற்றிடம் என்னை சுற்றிப் பரவியது. இந்த நிமிடதோடு உறைந்துபோ என மனம் பரபரத்தது. நானும் நகராமல் அந்தத் தருணத்தோடு லயித்திருந்தேன. காதலிக்க ஆரம்பித்தேன்.
மெதுவாக எழந்து சாளரமருகே சென்று எட்டிப் பார்த்தேன். இன்னும் உலகில் தானிருக்கிறாய் என்று தார்ச்சாலை என்னை பார்த்து சிரித்தது. காகம் எனக்காய் இரங்கற்பா வாசித்தது. தெருவோர நாய்கள் கூட என்னைக் கருனையோடு பார்பதாய் தோன்றியது. மொத்த உலகின் பரிதாபத்திற்கும் ஆளானதாய் ஒரு திகைப்பு. திரும்பி கடிகாரத்தைப் பார்த்தேன். அதிகாலை 3.00 மணி மீண்டும் சிரித்தேன். என் காதல் காலத்தைக் கடிகாரம் கணக்கிடிவதாய் தோன்றியது. ஆம் இன்றோடு மூன்று வருடம் முடிவடைகிறது, நானும் அவளும் காதல் பரிமாறி!அந்த ஆரம்ப நாட்களை மனம் அசைப்போட்டது.இதே போன்ற ஒருஅதிகாலை நேரம். எங்களின் ஆறுமாத நட்பை களைந்து நாங்கள் காதலை உடுத்தியது அப்போதுதான்.
அவளோடு கனவில் சஞ்சரித்துக் கொண்டிருந்த என்னை அலைபேசி எழுப்பியது.அவள் பெயர் பார்த்ததும் செயற்கையான நிதானத்தோடு விளித்தேன். சட்டென்று கேட்டாள், "என்னைக் காதலிக்க தோன்றவில்லையா?" திணறினேன், 'உனக்கும்தான் தோன்றவில்லை?" சமாளித்து அவள் கேள்வியையே பதிலாக்கினேன். "சரி, உன்னை விட நான் மூன்று வயது பெரியவள்", என்றாள். "இதுவரை நான் அதை யோசித்ததில்லை ,இனிமேலும் மாட்டேன்" என்றேன். "இருவரின் மதமமும் வேறுயாயிற்றே?"என்றாள். "சரி,இருவரும் பொதுவான வேறு ஒரு மதத்திற்க்கு மாறுவோம்!"என்றேன். சிரித்தாள். "சரி நீ தூங்கு, காலையில் பேசிக்கொள்ளலாம்" எனத் துண்டித்துவிட்டாள். தூக்கம் தடம் தெரியாமல் போயிற்று. நான் தவிப்பதறிந்து அவளாகவே கேட்டுவிட்டதாகத் தோன்றியது. அன்று தொடங்கி இந்நாள் வரை என் எல்லாம் தேவைகளையும் எளிமையாக்கி விடுவாள். இப்போதும் கூட அப்படித்தான்.என்னை சிறிதும் தடுமாறவிடாமல், காயப்படுத்தாமல், மிக அழகாக மூன்று வருட காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டாள்.
திடீரென ஒரு அழுத்தம் தோன்றியது. "அடடா, என்னைப் போலவே அவளும் இப்போது தனித்துதானிருப்பாள், யார் ஆறுதல் கூறுவார்கள். மிகவும் மென்மையானவளாயிற்றே. இந்த முடிவை எட்டும் முன் எத்தனைத் துடித்துப்போயிருப்பாள், அவளை யார் தேற்றுவார்கள்" என்று எண்ணும்போதே அவள் மீதான காதல் அதிகமாயிற்று. அவளிடம் மன்னிப்புக் கேட்க மனம் மன்றாடியது. ஏனோ தெரியவில்லை எங்களின் பல முதல் தருணங்கள், கடந்த ஒரு வாரத்திற்குள்ளாகவே நடந்தேறியது. முதல் ஊடல்,முதல் மெளனம்,முதல் பிரிவு, ஆனால் இவையாவும் கடைசியாகவும் போகுமென எதிர்பார்க்கவில்லை. நான் அறிந்தவரை மிக இயல்பாக நடந்த காதல்முறிவு இதுவாகத்தான் இருக்கும் எனப்பட்டது. யோசித்துப்பார்த்தால் இதற்க்காகத்தான் அவள் என்னை இந்த மூன்று வருடங்கள் தயார் செய்ததாக தோன்றியது.
அவள் அனுப்பிய அந்த நீண்ட மின்னஞ்சலை ஒரே வார்த்தையில் மொழி பெயர்த்து பார்த்தேன். ‘முற்றும்’ பொருத்தமாய்ப்பட்டது. அவள் முன்மொழிந்ததை எந்த அதிர்வுகளுமின்றி வழி மொழிந்தேன். 'ஏன்?"என கேட்கக் கூடத் தோன்றவில்லை. தனிச்சிறகு என்றும் காற்றிடம் கேள்வி கேட்க முடியாது. நானும் அப்படியே! என் கைபிடித்து அழகாக கூட்டிச் சென்றாள். பலரின் ஆச்சரியப் பார்வைகளை எனக்கு பரிசளித்தாள். இயல்பிலேயே பெண்கள் ஆண்களை விடப் பக்குவப்பட்டவர்கள். அதிலும் இவள் என்னை விட வயது மிகுந்தவள். எங்களின் மனங்களையே இரு சிறகுகளாக்கிக் காதல் வானில் சிறகடிக்கச் செய்தாள். அவள் அருகாமையின் மயக்கத்தில் உயர,உயரப் பறந்தேன். சட்டேன்று ஓற்றைச் சிறகை மட்டும் முறித்துப் போய்விட்டாள். எஞ்சிய சிறகை கொன்டு பறப்பது அரிது என்பதறிந்து, தரைநோக்கித் தடையில்லாமல் சென்று கொண்டிருக்கிறேன். சேரும் இடம் பற்றிய எந்தத் தவிப்பும் இப்போது என்னிடமில்லை.
அவளுக்கும் இது வலியே தந்திருக்கும். பின் ஏன்? யோசித்தேன். நாட்களுக்குள் பின் நகர்ந்தேன்.ஒரு வாரம் முன்புவரை எந்தத் தடயமும் இல்லை. முதல் ஊடல், பின் மெளனம், அதைத் தொடர்ந்து பிரிவு! யோசிப்பதற்கு கூட அதிகமில்லாமல் மிக எளிதாக இருந்தது. மீண்டும் ஒருமுறை அந்த மின்னஞ்சலை படித்தேன். எந்த சலனமுமில்லாமல், மிக நிதானமாக வார்த்தைகளை கோர்த்திருந்தாள்.எப்போதும் எங்கள் இருவரில் அவளே அதிகம் காதலிப்பதாய் எனக்கொரு பொறாமையுண்டு. இப்போது மொத்தமும் எனக்கே சொந்தமாகிவிட்டதாய் ஒரு உணர்வு. இனி ஒவ்வொரு நிமிடமும் இதை இரசிக்கலாம். பங்குபோட ஆளில்லை என்றொரு சுயநலம். அவளுடன் இருந்த ஒவ்வொரு தருனமும் என்னுள் மின்னி மறைந்தன. சிரித்தேன்!